கோ - ஆப்டெக்ஸில் ஜவுளி கடன் அதிகரிப்பு: அரசு துறைகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அனுமதி

சேலம் :ஜவுளிக் கடனை திரும்ப செலுத்தாத, அரசுத்துறைகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப, மண்டல மேலாளர்களுக்கு, அனுமதி வழங்கி, கோ - ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது, அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத தவணை
அடிப்படையிலும், துறைகளின் மொத்த கொள்முதலுக்கும், மூன்று மாத சம்பள அடிப்படையில், கடனுக்கு ஜவுளி வகைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், கோ - ஆப்டெக்ஸில், ஜவுளியை கடனாக பெற்ற அரசுத்துறைகள், அதில் பணியாற்றும் ஊழியர்கள், வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், நிலுவைக் கடன் தொகை அதிகரித்தது.கடந்த, 2010 வரை, தொடர்ந்து கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில், நோட்டீஸ் வழங்கி, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
கடந்த, 2010 செப்.,21ல், அப்போதைய கோ - ஆப்டெக்ஸின், கடன் விற்பனை பிரிவு மேலாளர் சரஸ்வதி, ஜவுளி ரகங்களின் விற்பனையை கருத்தில் கொண்டு, அரசுத்துறைகளுக்கோ, ஊழியர்களுக்கோ, நோட்டீஸ் அனுப்புதல் உள்ளிட்ட சட்டப்பூர்வ
நடவடிக்கை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.கடந்த, 2010 செப்., துவங்கி, 2015 செப்., 7ம் தேதி வரை, இதே நடைமுறை பின்பற்றப்பட்டதால், அரசுத்துறை ஊழியர்கள், கோ - ஆப்டெக்ஸில் பெற்ற கடன் தொகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்தனர். இதனால், அந்த தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
செப்.,9ல், கோ - ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், கடன் பெற்று திரும்ப செலுத்தாத அரசுத்துறைகள், ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
நோட்டீஸ் அனுப்புவது குறித்து, மண்டல மேலாளர், மண்டல கமிட்டிக்கு விற்பனை நிலையத்தின் மேலாளர் பரிந்துரை செய்ய வேண்டும். அந்த பரிந்துரையின் அடிப்படையில், மண்டல மேலாளர்கள், மண்டல கமிட்டி, கடன் பெற்றவர்களின் விபரத்தை பெற்று, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, மாற்றம் குறித்து, தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.