அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி: தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி

விருதுநகர்: அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள், வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் நியமிக்கப்பட்டனர். இதற்குப் பிறகும் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.


மாற்றுப்பணி:


ஒரு பள்ளியின் ஆசிரியர், வாரத்திற்கு மூன்று நாட்கள் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்கள்தான்.இதனால், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்கும் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையும் என ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம். மற்ற மாவட்டங்களிலும் ஏறக்குறைய இதே நிலைதான். அங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆசிரியரை நியமிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அருகில் உள்ள பள்ளிகளில் இருந்தும் மாற்றுப்பணிக்காக, வாரத்தில் மூன்று நாட்கள் ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களையும் இப்பணியிடங்களில் நிரப்ப அரசுதான் முடிவு செய்ய வேண்டும், என்றார்.