வினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளும் கற்றுத் தரப்படும். இதற்காக, வினாத்தாள் வங்கி புத்தகம் மற்றும் கணித ஆசிரியர்களின் சிறப்பு தயாரிப்பான, 'கம் புக்' என்ற முக்கிய கணித வினா புத்தகம், பள்ளி கல்வித் துறையின் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் விற்பனை செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் முதல் வாரத்தில், விற்பனை துவங்கும். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புவினாத்தாளில், புதிய கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, வினா வங்கி புத்தக விற்பனையும் இன்னும் துவங்கவில்லை. அனைத்து பள்ளிகளிலும் முழு அளவில் பாடங்களை முடிக்கும் வரை, வினா வங்கி விற்பனையை நிறுத்தி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.