ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர், அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், இனி, குற்ற வழக்குகளை சந்திக்க நேரிடும். மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: 


அரசின் உயர் பதவிகளில் பணியாற்றியவர்கள் பலர், ஓய்வு பெற்றதும், அரசு சாரா அமைப்பிலோ, தனியார் நிறுவனங்களிலோ சேருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவற்றில், சில அரசு சாரா அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையிலும், நாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் போராட்டத்தை துாண்டி விடுகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் பெறுவோர், இனி, ஓய்வு பெற்ற இரு ஆண்டுகளுக்குள், அரசு சாரா அமைப்பிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ சேர்ந்தால், அதுகுறித்த தகவல்களை அரசுக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும்போது, அவர்கள் சார்ந்த அமைப்பு அல்லது தனியார் நிறுவனங்கள், அரசின் வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுடன், தொடர்புடைய எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தாங்கள் சேரும் அமைப்பு, எந்தவித வர்த்தக லாபம் தரும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற தகவல்களை மறைத்து, அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், சம்பந்தப்பட்ட பென்ஷன்தாரர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தாங்கள் சேரும் நிறுவனங்கள் அல்லது அமைப்பின் முழு விவரம், அவற்றில் சேருவதற்கான காரணம், வருமான வரி நிரந்தர கணக்கு எண், அந்த அமைப்பின் பணிகள் ஆகியவை குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.