பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது. இதை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த மாதம் 29 முதல் அக்டோபர் 6 வரையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை காலை 11 மணி முதல் பதிவு செய்தால் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் நவம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.மொழிப் பாடங்களுக்கு ரூ.305-ம், பிற பாடங்களுக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ரூ.205-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பிறகு அளிக்கப்படும் ஒப்புகைச்சீட்டை வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.