போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி,
ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு
முடிவு செய்துள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய
வேண்டும்;
ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, 15 கோரிக்கைகளை
வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்
சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சமீபத்தில் நடத்திய, ஒரு நாள்
வேலைநிறுத்தப் போராட்டம், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியானது. அதனால்,
ஆசிரியர்களில் ஒரு தரப்பினரை மட்டுமாவது சரிக்கட்டும் வகையில், ஆறாவது
சம்பளக் கமிஷன் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும்,
ஏற்கும் நிலையில் அரசு இல்லை. ஆனாலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாடு குறித்து, முதல் கட்ட பரிசீலனை நடத்தப்பட உள்ளது.இதற்கான
பட்டியலை அனுப்பும்படி, நிதித்துறையிலிருந்து, கல்வித்துறைக்கு கடிதம்
வந்துள்ளது. நாங்களும் நிதித்துறைக்கு அனுப்ப கோப்புகளை தயார் செய்து
வருகிறோம்; விரைவில், முடிவு தெரியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.