சட்டசபை தேர்தல் பணி துவக்கம் கல்வி துறைக்கு அவசர கடிதம்

.தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும், தேர்தல் பணியாற்ற உள்ள பணியாளர் பட்டியலை அனுப்ப வேண்டும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார். அனைத்து
பள்ளிக்கல்வி அலுவலகங்கள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்கான ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
எனவே, தங்கள் கல்வி நிறுவனங்களில், தேர்தல் பணியாற்ற தகுதியுள்ள ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் முழு விவரங்களை, தங்கள் நிறுவன தலைமை அதிகாரிகள் மூலம், மாவட்ட தேர்தல் துறைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பத்தையும், கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்து, விரைவில் விவரங்கள் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு, ஓட்டுச்சாவடி அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதற்கட்டமாக, அதன் விவரங்களை மட்டும், தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளோம் என்றனர்