6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்

விரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை  எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி முன்னிலையில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 3 பேர் மட்டுமே பணியிடங்களைத் தேர்வு செய்தனர்.
ஊதிய உயர்வுக்காக பதவி உயர்வை துறந்த ஆசிரியர்கள்: ஒரு பள்ளியில் 10 ஆண்டுகள் வரை   பணி செய்யும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அளிக்கப்படுகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பதவி உயர்வுக்கு முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பலருக்கும், 6 மாதங்களில் தேர்வு நிலை அளிக்கப்பட உள்ளது.
தேர்வு நிலை கிடைக்கும்போது, ஊதியத்தில் 6 சதவீதம் உயர்வு கிடைக்கும். அதே நேரத்தில், பதவி உயர்வு கிடைத்தால் 3 சதவீதம் மட்டுமே ஊதியம் உயரும். இதனால், பெரும்பாலான ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான தாற்காலிக உரிமைவிடல் அடிப்படையில் கலந்தாய்விலிருந்து வெளியேறியதாக, கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.