அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்த நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்–2 தேர்வுக்கு கூடுதலாக 84 பணியிடங்கள் ஜனவரி 24–ந்தேதி தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்த நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்–2 தேர்வுக்கு கூடுதலாக 84 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:–
கூடுதல் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி–2 ல் (நேர்முகத்தேர்வு அல்லாத) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை கடந்த 12–ந்தேதி அன்று வெளியிட்டிருந்தது.
மேற்படி குரூப்–2 தேர்வில், வனத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை மற்றும் நிலஅளவை துறைகளில் உள்ள உதவியாளர் பதவி, தலைமைச்செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள நேர்முக உதவியாளர் ஆகியவற்றில் 84 கூடுதல் பதவிகள் உள்ளடக்கிய துணை அறிவிக்கையினை நேற்று (20.10.2015) வெளியிட்டுள்ளது.
தேர்வு தேதி மாற்றம் அவ்வறிவிக்கையில் வெளியிடப்பட்ட தேர்வு தேதியும் மாற்றப்பட்டு 24.01.2016 அன்று இத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. மேலும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விவரங்களில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpscexams.in, www.tnpscexams.net ஆகிய இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். 12.10.2015 அறிவிக்கையின்படி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் மறுபடியும் விண்ணப்பிக்கத்தேவையில்லை.
தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விஜயகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.