பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுவிடும் அதிகாரி தகவல்

அங்கீகாரம் புதுப்பிக்காமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்று விடும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்தார்.


பள்ளிகளின் அங்கீகாரம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என்று 3 வகையான பள்ளிகள் உள்ளன. இவற்றில் நர்சரி பள்ளிகள் தொடக்கப்பள்ளி இயக்குனர் ரெ.இளங்கோவன் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆயிரம் நர்சரி பள்ளிகள் உள்ளன. அது போல மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்து 46 மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருக்கின்றன. மொத்தத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் ஏராளமான பள்ளிகள் அங்கீகாரம் பெற்று உள்ளன. நிலம் குறைவாக உள்ளது, கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை என்ற காரணங்களால் 600-க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பள்ளிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களால் அங்கீகாரம் புதுப்பிக்க இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை கூறியதாவது:-

தேர்வுக்கு முன்பாகபுதுப்பிக்கப்படும்

மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்களால் பள்ளிகள் அங்கீகாரத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. தரமாக இருந்தால் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களின் நிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும். அதற்குள்ளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரமும் புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு பிச்சை தெரிவித்தார்.