குரூப் 2 தேர்வு: 22 பணியிடங்களுக்கு அக். 19-இல் கலந்தாய்வு தொடக்கம்

குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

 இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 குரூப் 2 தொகுதியில் அடங்கிய பணிகளுக்கு (நேர்காணல் அல்லாத) 2012-ஆம் ஆண்டு நவம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
அதில், தேர்வானவர்களுக்கு இதுவரை 5 கட்டமாக கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. மேலும், காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு ஆறாவது கட்டமாக கலந்தாய்வு சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
 கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு- கலந்தாய்வுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு விரைவஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. 
 மேலும், அழைப்புக் கடிதத்தை www.tnpsc.gov.in   என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.