16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளிகவனிப்பாரா கல்வி செயலர்

மதுரை:தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.
அதேபோல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு எண்: 175ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.
கடந்த ஜூனிற்கு முன், ஒவ்வொரு ஐந்தாண்டு அல்லது ஆண்டு தோறும் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், ஜூனிற்கு பின் ஒவ்வொரு மாதமும் நிதித்துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் தான், சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனால் ஆறு மாதங்களாக தாமதமாக சம்பளம் பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் முடியும் தருவாயிலும், அதற்கான நிதித்துறை ஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால், நவ.,10 தீபாவளியை புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்கி இவர்களால் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., உட்பட பல திட்டங்களில் பணியாற்றம் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. நிதித்துறை ஒப்புதல் அதிகபட்சம் ஒவ்வொரு ஐந்து அல்லது குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒருமுறையாவது அளிக்க வேண்டும்.
மாதத்தில் 20ம் தேதிக்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, ஒன்றாம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாட செய்ய முடியும். வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் திட்டப் பணிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்ல தயங்குவர், என்றார்.