கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள்
தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண
வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்கு
முன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில், பள்ளி
அளவிலான குறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் தங்களது குறைகளை இந்தக் குழுக்களில் தெரிவிக்க வேண்டும்.
வட்டார, மாவட்ட, மாநில அளவிலான குறைதீர் குழுக்களையும் மாநில அரசு அமைக்க
வேண்டும் என விதிகளில் பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது ஒவ்வொரு குழுக்களும் எத்தனை நாள்களில் புகார்களுக்கு தீர்வு காண
வேண்டும், இந்தக் குழுக்களில் யார் இடம்பெற வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக
மத்திய அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
அதேநேரத்தில், பணி தொடர்பான விவகாரங்கள், கல்வித் துறையால் தாற்காலிகப்
பணியிடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான விவகாரங்களை இந்தக் குழுக்கள்
விசாரிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின் விவரம்:
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளிகள் அளவிலான முதல் குறைதீர் அமைப்பாக
செயல்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது புகார்களை இந்தக்
குழுவின் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆசிரியர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்ட 15 நாள்களுக்குள்
அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தப் புகார் மீது நடவடிக்கை
இல்லையென்றாலோ அல்லது அதற்கான பதில் திருப்தியளிக்கவில்லை என்றாலோ வட்டார
அளவிலான குறைதீர் குழுவிடம் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கலாம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக வட்டார வளர்ச்சி
அலுவலர் தலைமையிலான வட்டார குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். வட்டார
கல்வி அதிகாரி இந்தக் குழுவின் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலராகச்
செயல்படுவார்.புகார் பெற்ற 30 நாள்களுக்குள் இந்தக் குழு அதற்குத் தீர்வு
காண வேண்டும். இந்தக் குழு தேவையின் அடிப்படையில் கூட வேண்டும்.
குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு: மாவட்ட அளவிலான குறைதீர் குழுவின் தலைவராக மாவட்ட
ஆட்சியரும், மாவட்ட கல்வி அதிகாரி அமைப்பாளராகவும், உறுப்பினர் செயலராகவும்
இருப்பார். நகராட்சிகளின் மூத்த உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெற
வேண்டும். இந்தக் குழு 3 மாதங்களுக்குள் அந்தப் புகாருக்கு தீர்வு காண
வேண்டும்.மாநில அளவிலான குழு: மாவட்ட அளவிலான குழுவில் திருப்தியில்லை
என்றால் ஆசிரியர்கள் மாநில அளவிலான குறைதீர் குழுவிடம் முறையிடலாம். இந்தக்
குழுவுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறைச்
செயலர் பரிந்துரை செய்யும் 2 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்தக்
குழு 90 நாள்களுக்குள் புகார்களுக்குத் தீர்வு காண வேண்டும். குறைந்தது 6
மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.