1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை

ராமநாதபுரம்:தமிழக கருவூல கணக்குத்துறையில் 1,500 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகளை முடிக்க முடியாமல் ஊழியர்கள் தத்தளிக்கின்றனர்.தமிழகத்தில் 32 கருவூல அலுவலகங்கள், 229 சார்நிலை கருவூலங்கள் உள்ளன. இங்கு 5,186 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
தற்போது 3,600 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். கண்காணிப்பாளர், கணக்காளர், இளநிலை உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் பெரும்பான்மையாக காலியாக உள்ளன. தற்போது அவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம், மருத்துவ காப்பீடு, 'இ பென்ஷன்' போன்ற பணிகள் கூடுதல் பணிகளாக வழங்கப்பட்டுள்ளன. புதிதாக சார்நிலை கருவூலங்கள் அனுமதிக்கப்பட்டாலும், அதற்குரிய பணியாளர்களை நியமிப்பதில்லை. அதேபோல் தாலுகா அலுவலகங்களுக்கு தகுந்த சார்நிலை கருவூலங்கள் இல்லை. இதனால் கருவூல ஊழியர்கள் பணிச்சுமையால் தத்தளிக்கின்றனர்.
கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: கணக்காயர் அலுவலகத்தில் இருந்து புதிய பென்ஷன் திட்டம் கருவூல கணக்குத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கருவூல அலுவலகத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர், 2 கணக்காளர் பணியிடங்கள் கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியை முடிக்க முடியும். பென்ஷனர் எண்ணிககையும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. பணியாளர்கள் அதிகரிக்காமல் பணியை குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதனால் மனஉளைச்சலில் உள்ளோம், என்றனர்.