11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கப் பயிற்சி

திருவண்ணாமலையில் இன்று தொடக்கம்
       திருவண்ணாமலை மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான இலவச சிறப்பு ஊக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (அக்டோபர் 26) தொடங்குகிறது.இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மூலம் திருவண்ணாமலை மாவட்ட அரசுப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் 150 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ
ரியில் சிறப்பு ஊக்கப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
         அதன்படி, திங்கள்கிழமை (அக்டோபர் 26) தொடங்கும் இந்த பயிற்சி முகாம், வரும் 30-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதியுதவியுடன் நடைபெறும் இந்த பயிற்சி முகாமுக்கு, கல்லூரி முதல்வர் வி.மணிவண்ணன் தலைமை வகிக்கிறார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் என்.ஜெயராமன் பயிற்சி முகாமைத் தொடங்கி வைக்கிறார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார், சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி வி.சுப்பிரமணியன், பல்கலைக் கழகப்பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடிப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்துப் பேசுகின்றனர்.மேலும், மாணவ-மாணவிகளிடையே பேச்சுத் திறனை வளர்க்கும் வகையில் குழு விவாதம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது என்று திருவண்ணாமலைஅரசுக் கல்லூரி தெரிவித்துள்ளது.