எஸ்.சி.,--எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித் தொகை தாமதத்தால் பாதிப்பு

வத்தலக்குண்டு:பி.எட்., கல்லுாரிகளில் படிக்கும் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் அரசு தாமதிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்..தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்
(என்.சி.டி.இ.) கண்டிப்பு காட்டியதைத் தொடர்ந்து, தமிழக அரசு பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகள் என அறிவித்தது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 'போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' எனப்படும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மத்திய அரசின் நிதிஉதவியுடன், மாநில அரசால் வழங்கப்படுகிறது.


       தொழிற்கல்வி உட்பட உயர்கல்வி பயிலும் இம்மாணவர்களுக்கு தலா ரூ.41 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பி.எட்., படிக்கும் 12 ஆயிரம் பேருக்கும் இத்தொகை உண்டு.
2014--15ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையில் 30 சதவீதத்தை மட்டும் கல்வி ஆண்டின் இறுதியில் வழங்கியது. 2015--16 கல்வி ஆண்டு துவங்கிய நிலையில் மீதித்தொகை கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை.
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்களிடம் இருந்தும் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. அதனால் தேவையான வசதிகளை கல்லுாரிகளில் ஏற்படுத்த முடியவில்லை.
கிராமப்புற கல்லுாரிகளில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். கல்விக் கட்டணத்தை தமிழக அரசு வழங்காததால் இப்பிரிவு மாணவர்களை கல்லுாரியில் சேர்ப்பதில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டுகின்றனர்.
கல்வி கட்டணத்தை உடனடியாக வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு கல்வி ஆண்டில் துவக்கத்திலேயே வழங்கினால், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களின் உயர்கல்வியில் தேக்கநிலை ஏற்படாது. சட்டசபை மானிய கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கல்லுாரி
நிர்வாகங்கள் எதிர்பார்த்து உள்ளன.