இணையதளம் மூலம் பொருள்கள் வாங்க எஸ்.பி.ஐ.யின் தனி கடன் அட்டை அறிமுகம்

இணையதளத்தின் மூலமாக பொருள்களை வாங்குவதற்கான பிரத்யேக கடன் அட்டையை (simply click credit card) புதன்கிழமை அறிமுகப்படுத்தியதுபாரத ஸ்டேட் வங்கி.இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரத
ஸ்டேட் வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் ஜசுஜா கூறியதாவது:
இணையதளத்தில் பொருள்களை வாங்கும் திறன் இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் தரமான, குறைவான விலையில் பொருள்களை வாங்கி, அப்பொருள்கள் அவர்களது இல்லத்திற்கு சென்று விநியோகிப்பது பலருடைய கவனத்தை பெற்றுள்ளது.
எனவே, இணையதளம் மூலம் எளிதில் பொருள்களை வாங்குவதற்கும், மேலும் பணத்தை மிச்சப்படுத்தவும் புதிய கடன் அட்டையை அறிமுகப்படுத்துகிறது.இந்தப் புதிய கடன் அட்டை மூலம் பாரத ஸ்டேட் வங்கி, இணையதளத்தில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களுடன் கை கோர்த்துள்ளது. அதன்படி "அமேஸான் இந்தியா',"புக் மை ஷோ', "கிளியர் ட்ரிப்', "பேஃப் பர்னிஷ்', "புட் பாண்டா', "லென்ஸ் கார்லேண்ட்', "ஓலா கேப்ஸ்' இணையதளங்களில் இந்த கடன் அட்டை மூலம் எளிதாக பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் செலவு செய்யும் அனைத்திற்கும் 5 மடங்கு வெகுமதி புள்ளிகளை இந்தப் புதிய கடன் அட்டை வழங்கும். மேலும், இந்த கடன் அட்டையுடன் இணைந்துள்ள நிறுவனங்களின் பொருள்களை வாங்குபவர்களுக்கு 10 மடங்கு வெகுமதி புள்ளிகளை வழங்குவது இதன் சிறப்பாகும். இந்தப் புதிய கடன் அட்டையை பெறுவதற்கு ரூ.499 செலுத்த வேண்டும் என்றார் விஜய் ஜசுஜா.