தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம்: வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது நிதியமைச்சகம்

தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதன்படி தங்கத்தின் எடைக்கு
இணையான விலை மதிப்புள்ள பத்திரங்களை அரசு வெளியிடும். 2,5,10 கிராம்கள் அல்லது இதற்கு அதிகமான எடைக்கு இணையான விலையில் இந்த பத்திரங்கள் இருக்கும். சர்வதேச தங்கக் கடன் சந்தை நிலவரத்திற்கேற்ப இப்பத்திரங்களுக்கு வட்டி நிர்ணயிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

          எனினும் இவ்வட்டி குறைந்தது 2 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஓராண்டில் அதிகபட்சம் 500 கிராம் தங்கத்துக்கு இணையான பத்திரங்களை மட்டுமே வாங்க முடியும் என்றும் அரசு கூறியுள்ளது.தங்க பத்திரத்திற்கான குறைந்த பட்ச முதலீட்டுக் காலம் 5 முதல் 7 ஆண்டுகளாக இருக்கும் என்றும் இதன் மூலம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்க அபாயத்தில் இருந்து முதலீட்டாளரை காக்க முடியும் என்றும் அரசின் வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.