பள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை: பள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் செப்.,14ல் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர், திருச்சி, சேலம், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டது.
எனவே, முன்னெச்சரிக்கையாக, அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களை அகற்றவும், சுத்தம் செய்யவும், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கைகளை சுத்தமாக வைத்திருப்பது, குடிநீரை காய்ச்சி குடிப்பது, பாதுகாப்பான உணவுகளை உட்கொள்வது, வகுப்பறைகளை சுத்தமாக பராமரிப்பது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.