வாக்குச்சாவடிகளில் 'ஆன்லைனில்'வாக்காளர்களைச் சேர்க்க முடிவு:படிவங்களுக்கு 'குட்பை'

திண்டுக்கல்:காகித பயன்பாட்டை குறைக்க, வாக்குச்சாவடிகளில் 'ஆன்லைன்' மூலம் வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் 'இ கவர்னன்ஸ்'

            திட்டத்தில் அனைத்து துறைகளையும் 'ஆன்லைன்' மூலம் இணைத்து வருகின்றன. இதனால் காகித பயன்பாடு குறைந்துள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்க, திருத்தம், தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதனால் தேர்தல் ஆணையத்தில் மட்டுமே அதிக காகித பயன்பாடு உள்ளது.இதை குறைக்க வாக்குச்சாவடிகள், தாலுகா அலுவலகங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இட மாற்றம் போன்றவை 'ஆன்லைனில்' மேற்கொள்ள தேர்தல் ஆணையம்
திட்டமிட்டுள்ளது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாக்குச் சாவடிகளில் நேரடியாக 'ஆன்லைனில்' பதியப்படுவதால் காகித பயன்பாடு குறைவதோடு, மீண்டும் கம்ப்யூட்டரில் ஏற்ற தேவை இருக்காது. இப்பணிக்காக வாக்குச்சாவடிகளில் கம்ப்யூட்டர் இயக்கத்தெரிந்த இளைஞர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது, என்றார்.