நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டம்: கிடைக்ககூடிய வருமானம்… முக்கியஅம்சங்கள்…. சிறப்பு பார்வை

உங்கள் வீடுகளில் உள்ள தங்க நகைகள் கூடுதலாக வருமானத்தையும் ஈட்டித் தந்தால் எப்படியிருக்கும்.ஆம்.அப்படி ஒரு வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன.இதில் எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.



          வீடுகளில் உள்ள தங்க நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்து அதற்கு வட்டியாக சிறிய தொகையை பெறும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு விதிகளைமத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.தங்கத்தை குறைந்தபட்சம் 30 கிராமிலிருந்து வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். டெபாசிட் செய்யப்போகும் தங்கம் bis தரச்சான்றிதழ் பெற்றதாக இருத்தல் அவசியம்.குறைந்த பட்சம் ஓராண்டு மற்றும் அதன் மடங்கில் டெபாசிட் காலம் இருக்கும். ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படஉள்ளது. தங்கத்தை டெபாசிட் செய்த 30 அல்லது 60 நாட்களில் இருந்து வட்டி கிடைக்கும். டெபாசிட்டிற்கான வட்டியை அந்தந்த வங்கிகளே தீர்மானிக்கும்.

முதிர்வின்போது டெபாசிட் செய்த அளவிற்கு ஈடான தங்கமாகவோ, அல்லது பணமாகவோ கொடுக்கப்படும்.மக்களிடம் இருந்து டெபாசிட் ஆக பெறப்படும் தங்கம் உருக்கப்பட்டு பின்னர் நகை செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படும். எனவே இத்திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தங்கம் மீண்டும் அதே வடிவில் நிச்சயம் கிடைக்காது என்பதைமக்கள் கவனிக்க வேண்டியுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடக்கும் தங்கத்தை கொண்டு வருமானம் ஈட்ட இந்த திட்டம் மிகவும் உதவும்.தங்கம் டெபாசிட் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்துக்கு அரசு வருமான வரி மற்றும் மூலதன வரிச் சலுகை அளிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் வீடுகளில் 20 ஆயிரம் டன் தங்கம் பெட்டிகளுக்குள் பூட்டிக் கிடப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதை சுழற்சி முறையில் மீண்டும் சந்தைக்கு கொண்டு வருவதால் அரசுக்கு ஏராளமான அன்னியச் செலாவணி மீதமாகும். அதே சமயம் தங்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டுள்ள உள்ள தங்கத்தால் ஓரளவு வருமானமும் கிடைக்கும் என்பது மக்களுக்கு சாதகமான விஷயம்.​