தலைமை ஆசிரியர் காலியிடம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

          சிவகங்கை:தமிழகத்திலுள்ள அரசு உயர்,மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் குறித்த விபரங்களை, அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை சிலர் விரும்பவில்லை. இலவச நலத்திட்ட உதவிகளை வழங்குதல், சில பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையேயான கோஷ்டியை சமாளித்தல், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை மனதில் வைத்து பதவியை தவிர்த்தனர்.

            இதன் காரணமாக தலைமை ஆசிரியர் பணியிடம் சில இடங்களில் நிரம்பாத நிலை உருவானது. இந்நிலையில் உயர்,மேல்நிலை பள்ளிக்கான தரம் உயர்வு பட்டியல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத சூழலில், தலைமை ஆசிரியர் காலி யிடம் சேகரிப்பு பதவி உயர்வை விரும்புவோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், “கலந்தாய்விற்கு பின், காலியிடம் பற்றி பட்டியல் கேட்பது வழக்கம். தரம் உயர்வு பள்ளிகள் அறிவிப்பு வெளியாகும் முன், பட்டியல் கேட்பதால் காலியிடங்களின் அடிப்படையில் தரம் உயர்வு பள்ளிகளை கணக்கிட்டு வெளியிடலாம். காலாண்டு நெருங்குவதற்குள் தரம் உயர்வு பள்ளிகள் பட்டியல் அறிவித்தால் மாணவர்களை சேர்ப்பது சிரம்ம் இருக்காது. டிசம்பருக்குள் அறிவிக்க வேண்டும், என்றார்