சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி
விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில்
பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
சி.பி.எஸ்.இ. அமைப்பின் இணைப்பைப் பெற்றுள்ள அனைத்துப் பள்ளிகளும் மாணவர்
சேர்க்கையின்போது தாய்மொழி குறித்த விவரங்களையும், மும்மொழிக் கொள்கையின்
அடிப்படையில் மாணவர் கற்பிக்க விரும்பும் மொழிகளையும் சேர்க்கைப்
படிவத்தில் குறிப்பிட வேண்டும்.இதுதொடர்பான தேவையான அனைத்து மாற்றங்களையும்
பள்ளி சேர்க்கைப் படிவங்களிலும், பதிவேடுகளிலும் மேற்கொள்ள வேண்டும் என
அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், ஆங்கிலம், ஹிந்தியுடன் ஏதாவது அரசியல்
சாசன சட்டத்தில் நவீன இந்திய மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றை
மூன்றாவது மொழியாக குழந்தைகள் கற்கலாம்.கேந்திரிய வித்யாலய பள்ளிகளில்
அண்மையில் மூன்றாவது மொழியான ஜெர்மானிய மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருத மொழி
கொண்டுவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குழந்தையின்
தாய்மொழி விவரங்களைப் பதிவு செய்வதை சி.பி.எஸ்.இ. கட்டாயமாக்கியுள்ளது.