தெற்கு ரெயில்வே புதிய காலஅட்டவணை வெளியீடு: தமிழக ரெயில்களில் முக்கிய மாற்றம் இல்லை

தெற்கு ரெயில்வே புதிய காலஅட்டவணையை நேற்று வெளியிட்டது. இதில் தமிழக ரெயில்களில் முக்கிய மாற்றம் எதுவும் இல்லை.
ரெயில் காலஅட்டவணை தெற்கு ரெயில்வே இந்த ஆண்டுக்கான புதிய காலஅட்டவணையை நேற்று வெளியிட்டது. இதில் தமிழகத்தில் இயக்கப்படும் 26 ரெயில்களின் வண்டி எண் மாற்றப்பட்டு உள்ளது. சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் 23 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புறப்படும் நேரமும், சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் 24 ரெயில்களின் வருகை நேரமும் மாற்றப்பட்டு உள்ளது.
அதேபோன்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 5 ரெயில்கள் புறப்படும் நேரமும், 9 ரெயில்கள் வருகை நேரமும் மாற்றப்பட்டு உள்ளது.
பயணிகள் ஏமாற்றம் தமிழகத்தில் இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களான பல்லவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று தென்மாவட்ட பயணிகளிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அட்டவணையில் அதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாததால் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை–மதுரை சென்னை சென்டிரல்–மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் ஏ.சி. துரந்தோ ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மதுரை ரெயில் நிலையத்தை காலை 7.10 மணிக்கு அடைகிறது. இந்த ரெயில் சேலம் ரெயில் நிலையத்தில் அதிகாலை 2.55 மணிக்கு நின்று 3.05 மணிக்கு புறப்படுகிறது.
அதேபோல் இந்த ரெயில் மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, சேலம் ரெயில் நிலையத்தை அதிகாலை 2.20 மணிக்கு அடைந்து, 2.30 மணிக்கு புறப்படுகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு காலை 7.20 மணிக்கு வந்து சேருகிறது.
ரெயில்கள் நீட்டிப்பு சென்னை சென்டிரல்–ஜம்முதாவி (16031) கன்னியாகுமரி–ஜம்முதாவி (16317), நெல்லை–ஜம்முதாவி (16787) ஆகிய ரெயில்கள் அக்டோபர் மாதம் முதல் ஜம்முதாவிக்கு பதிலாக ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி கட்ரா ரெயில் நிலையம் வரை செல்லும். மறுமார்க்கத்தில் ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி கட்ரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து புதுடெல்லி செல்லும் ரெயில் (12615) டிசம்பர் 10–ந்தேதி முதல் புதுடெல்லிக்கு பதிலாக டெல்லி சராய் ரோஹில்லா செல்லும். மறுமார்க்கமாக (12616) டிசம்பர் 10–ந்தேதி முதல் டெல்லி சராய் ரோஹில்லா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
வாரணாசி–ராமேசுவரம் ரெயில் (14260) நவம்பர் 1–ந்தேதி முதல் வாரணாசிக்கு பதிலாக உத்தரபிரதேச மாநிலம் மாண்டியத் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு (14259) நவம்பர் 4–ந்தேதி முதல் மாண்டியாத் ரெயில் நிலையம் வரை செல்லும்.