Automatic EB Bill Reading Machine!

தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர்' பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, தொழிற்சாலை, ஜவுளி ஆலை, ஐ.டி., நிறுவனங்கள் என, 8,200 உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன.

முறைகேடு:
இவற்றில், தற்போது, 'டைம் ஆப் டே' என்ற மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டரில் ஒவ்வொரு, 15 நிமிடமும் பயன்படுத்திய மின்சார அளவு பதிவாகும்.உதவி பொறியாளர், மாதந்தோறும், நேரடியாக சென்று, மின் பயன்பாட்டை கணக்கு எடுப்பார். ஏழு நாட்களுக்குள், மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், மின் வாரிய அதிகாரிகள் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் போது, நுகர்வோருடன் கூட்டு சேர்ந்து, முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, 'ரேடியோ பிரிக்யூன்சி மீட்டர்' பொருத்த முடிவு செய்யப்பட்டது.இந்த மீட்டரில், 'சிம் கார்டு' பொருத்தப்படும். ஊழியரிடம், 'ரிமோட்' கருவி வழங்கப்படும்.அதை அவர், ஒரு தெருவிற்குள் எடுத்து சென்றால், அங்கு வசிப்பவர்கள் பயன்படுத்திய மின்சார அளவு, அவர்களின் மீட்டரில் இருந்து, அதிர்வலை மூலம் நேரடியாக கருவியில் பதிவாகும்.
பின், அலுவலகம் சென்று, கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யலாம். இதை, சோதனை செய்த போது, பல பிரச்னைகள் ஏற்பட்டன.இதையடுத்து, உயரழுத்த மின் இணைப்பில், ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர் என்பது, 'சிம் கார்டு' உள்ள மீட்டர். இது, மின் வாரிய தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலக சர்வருடன் இணைக்கப்படும்.
மென்பொருள்:
அதில், மின் பயன்பாடு கணக்கிடும் முறை; கணக்கு எடுக்க வேண்டிய தேதியை மென்பொருளாக தயாரித்து, பதிவு செய்தால் போதும். நேரடியாக சென்று, மீட்டரில் கணக்கு எடுப்பதற்கு பதில், அந்த விவரம், 'சர்வர்' மூலம், மின் வாரிய அலுவலக கம்ப்யூட்டரில் பதிவாகும். அதை, நுகர்வோருக்கு, இ - மெயில் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பினால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.
2,000 கோடி யூனிட்:
தமிழகத்தில் வீடு, வணிகம் உள்ளிட்ட மின் இணைப்புகளின் மொத்த பயன்பாடு, ஆண்டுக்கு, 7,000 கோடி யூனிட். இதில், உயரழுத்த மின் இணைப்புகளின் பங்கு, 2,000 கோடி யூனிட்.