டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு

மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது.
எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.

இத்தேர்வு எழுத, பி.எஸ்சி., நர்சிங் முடித்து, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இத்தேர்வுக்காக, 12 ஆயிரத்து, 192 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 43 பேரின் விண்ணப்பங்கள், 'உரிய கல்வித்தகுதி இல்லை' என, நிராகரிக்கப்பட்டன. அத்துடன், 'நர்சிங் கவுன்சிலில் குறிப்பிட்ட பிரிவில் பதியவில்லை' எனக்கூறி, பி.எஸ்சி., நர்சிங் படித்த, 914 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள், நர்சிங் கவுன்சில் மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,யை தொடர்பு கொண்டு, தங்கள் பதிவு சரியானது தான் என முறையிட்டனர்.

அறிமுகம்:இதுகுறித்து, நர்சிங் கவுன்சில் விளக்கம் தர, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டது. நர்சிங் கவுன்சில் அளித்த விளக்கத்தில், '914 பேரும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யும் போது, ஒரே வகைப்பதிவு மட்டுமே இருந்தது. சமீபத்தில் தான், மூன்று வகைப்பதிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன' என, கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நிராகரிக்கப்பட்ட, 914 பேரின் விண்ணப்பங்களையும், டி.என்.பி.எஸ்.சி., மீண்டும்
ஏற்றுக்கொண்டது.