பி.எட். மாணவர் சேர்க்கை: 8,000 விண்ணப்பங்கள் விநியோகம்; விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மொத்தம் 8,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) கடைசித் தேதியாகும். 


                   பி.எட், எம்.எட். போன்ற ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கான படிப்புக் காலம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, 2015-16 கல்வியாண்டு பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மிகவும் தாமதமாக செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 13 மையங்கள் மூலமாக வியாழக்கிழமை வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதுகுறித்து பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் ஆர்.பாரதி கூறியது:
 
              பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மொத்தம் 8,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இதுவரை 5,700 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
 28 முதல் கலந்தாய்வு: நிகழாண்டு முதல் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி காலையில் இயற்பியல் பிரிவினருக்கும், மதியம் வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
 அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கில பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியம் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.