பி.எட்., படிக்க புதிய விதிமுறை

சென்னை:பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.



அத்துடன், 'புதிய விதிமுறைகளை, 21 நாட்களுக்குள் அமல்படுத்து வோம் என, கல்வியியல் கல்லுாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, தேசிய ஆசிரியர் கல்விக் குழு கூறியது.
ஆனால், 'புதிய விதிமுறைகளால், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படும்; அவற்றை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல்
கல்லுாரி நிர்வாகிகள் சங்க தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு, 'மனுக்களை நவம்பர், 2 மற்றும் 3ம் தேதி விசாரணைக்கு
பட்டியலிட வேண்டும்' என, உத்தரவிட்டது.