கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

மாணவர்களின் கல்விக் கடனுக்காக விசேஷ இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஐந்து வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும்; எந்த வங்கி கடன் தரத் தயாராக உள்ளதோ, அது குறித்த விவரமும், இந்த இணையதளத்தில் வெளியாகும்.

            நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்து பேசிய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'மாணவர்களின் நிதித் தேவை, கல்வி உதவித்தொகை போன்றவற்றிற்காக விசேஷமான தகவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஆணையம் அமைக்கப்படும்' என்றார்.

அதன் ஒரு விளைவாக, www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தை மத்திய நிதித்துறை, சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ., வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய, ஐந்து வங்கிகளுக்கு, கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.

அதற்கான விண்ணப்பம், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, வங்கிக் கடன் விவரம் போன்ற அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த ஐந்து வங்கிகளுடன், மேலும், 13 வங்கிகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளன. விரைவில் அனைத்து வங்கிகளும் இந்த இணையதளத்தில் சேரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.