அரசு பள்ளிகளில் தமிழில் 'மேப்' பிழைதிருத்தும் பணி நடக்கிறது

சேலம்:தமிழகத்தில் நில அளவை துறையினரால், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான, 'மேப்' வெளியிடப்பட்டிருந்தாலும், அவை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவை அனைத்து மாணவ, மாணவியருக்கும் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது என்பதால், தமிழ் மொழியில், மேப் தயாரித்து, பள்ளிகளில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



இதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர், அதற்கு, அரசாணையில் உள்ள தமிழ் பெயர், பேச்சு வழக்கில் உள்ள ஊர் பெயர் ஆகியவற்றை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், வரலாற்று ஆசிரியர்கள், நில அளவை அலுவலர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள், ஒவ்வொரு ஊரின் எல்லை, அதன் தமிழ் பெயர் உள்ளிட்டவற்றில் உள்ள பிழைதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணி நிறைவடைந்த பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தமிழில், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான வரைப்படங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம், மாணவ, மாணவியர், தாங்கள் வசிக்கும் ஊர், அதை சுற்றியுள்ள கிராமங்களின் அமைப்பு உள்ள நில அமைப்புகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.