கூடுதல் பணிகளுக்கு எதிர்ப்பு:தலைமை ஆசிரியர் போராட முடிவு

காரைக்குடி: 'அரசு நலத்திட்ட பணிகளுடன், கூடுதலாக, 'ஆதார்' அட்டை வழங்கும் பணிகளையும் கவனிக்க வேண்டும்' என, அரசு
உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், 'லேப்-டாப்' உட்பட, 14 வகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.

கற்பித்தல் பணியில் சுணக்கம் :இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்று, வினியோகம் செய்ய வேண்டும். இதனால் கற்றல், கற்பித்தல் பணியில் சுணக்கம் ஏற்படுவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இச்சூழலில், தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு விடுத்துள்ள உத்தரவில், 'பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்க, குடும்பத்தாரின் பட்டியலை, தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது. இதற்கு, தலைமை ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பிரசார செயலர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:இலவச சைக்கிள், லேப்டாப் மட்டுமே, பள்ளிக்கு நேரடியாக வருகிறது. பாட புத்தகம் உள்ளிட்ட, இதர பொருட்களை, தலைமை ஆசிரியர்கள், மாவட்ட அலுவலகத்திற்கு சென்று வாங்கி வர வேண்டும். இதில், ஆதார் அட்டை பணிகளையும் கவனிக்கச் சொல்வது, பணிச்சுமையை அதிகரிக்கும்; கல்விப் பணியை கவனிக்க முடியாது.

தனி உதவியாளர்:எனவே, நலத்திட்டங்களுக்கு என, தனி உதவியாளரை நியமிக்க வேண்டும். 'லேப்டாப்'களை பாதுகாக்க, மாற்றுப் பணியில் காவலாளியை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவுடன் இணைந்து,
போராடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.