மாணவனுக்கு கல்விக் கடன்: உயர்நீதிமன்றம் உத்தரவு

'நாகர்கோவில் ஏழை மாணவன் உயர்கல்விக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும்,' என வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.நாகர்கோவில் பீமநகரி சுப்பிரமணியன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பி.இ.,முடித்துள்ளார். எம்.டெக்.,(சூரிய
மின்சக்தி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
சென்னையில் ஒரு பல்கலையில் சேர கல்வி மற்றும் இதரக் கட்டணம் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் அனுமதிக்குமாறு, நாகர்கோவில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளையில் சுப்பிரமணியன் விண்ணப்பித்தார். வங்கி நிர்வாகம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அனுமதித்தது. கோரிய முழுத் தொகையையும் வழங்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் தாயுமானசாமி ஆஜரானார்.வங்கி நிர்வாகம்,'அரசு நிர்ணயித்ததைவிட மனுதாரர் அதிகத் தொகை கோரியுள்ளார்,' என தெரிவித்தது.நீதிபதி,“ நன்றாக படிக்கும் ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடக்கூடாது என்ற நோக்கில், அரசு கல்விக் கடன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. வங்கி நிர்வாகம் கூறுவது ஏற்புடையதல்ல. மனுதாரர் கோரிய தொகையை 2 வாரங்களில் வழங்க வேண்டும்,” என்றார்.