தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்

சிவகங்கை:பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள் 'ஈகோ' போன்ற சில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 485 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 மாவட்டத்திலும் பதவி உயர்வு மூலம்
நிரப்புவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. பணி மூப்பு அடிப்படையில் 650க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 10 சதவீதம் தவிர்த்து 90 சதவீத காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனைத்து மாவட்ட கலந்தாய்விலும் பங்கேற்ற 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் தங்களுக்கு தகுதி இருந்தும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை தேர்வு செய்யவில்லை. விருப்பமில்லை என கடிதம் கொடுத்தனர். ' நலத்திட்ட உதவிகளை கொடுப்பது முதல், பிற ஆசிரியர்களின் பிரச்னைகளை எதிர் கொள்வது வரை பல்வேறு சிரமங்களை சந்திப்பது, பணிச் சுமை போன்றவை பதவி உயர்வை தவிர்க்கும் காரணங்களாக உள்ளன' என, கூறுகின்றனர்.

மேலும்,விரும்பிய இடம் கிடைக்காத காரணத்தாலும் சிலர் பதவி உயர்வை தவிர்த்துள்ளனர்.முதுகலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணிக்கு ஏறக்குறைய ஒரே சம்பளம். தலைமை பொறுப்பில் இருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இரு பிரிவாக செயல்படுகின்றனர். இது போன்ற பிரச்னையால் தலைமை ஆசிரியர்களும் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.இது போன்ற காரணத்தால் பதவி உயர்விற்கு தகுதி இருந்தும்,கலந்தாய்வில் பங்கேற்று, விருப்பமில்லை என கடிதம் கொடுத்துள்ளோம்,” என்றனர்.