மருத்துவம் சார் பட்ட படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்

சென்னை:பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்சி., ரேடியோ தெரபி உள்ளிட்ட, ஒன்பது விதமான
மருத்துவம் சார் பட்டப் படிப்புகள் உள்ளன. 150 சுய நிதி கல்லுாரிகளையும் சேர்த்து, மொத்தம், 8,000 இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு, 19,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், இன்று துவங்குகிறது.
இன்று காலை, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான கலந்தாய்வும், பிற்பகலில், பொது பிரிவுக்கான கலந்தாய்வும் துவங்குகிறது.

'வரும், 27ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும்; மேலும் விவரங்களை, www.tn.gov.in, www.tnhealth.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.