வெளிநாடுகளில் கல்வி மையங்கள் கூடாது:பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அதிரடி உத்தரவு

தொலைநிலை பல்கலை கழகங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், தொலைதுார கல்வி மையங்கள் அமைக்கக் கூடாது' என, பல்கலை மானியக்குழுவான - யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

         இதுதொடர்பாக, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஒவ்வொரு மாநிலத்திற்கும், அரசியல் சட்டத்தில், எல்லை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த எல்லைக்கு வெளியே, எந்த ஒரு மாநிலமும், படிப்பு மையம் அமைக்க முடியாது. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும், பல்கலை கழகங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், படிப்பு மையங்களை
நடத்தக்கூடாது.அதேநேரத்தில், தனியார் பல்கலை கழகங்கள், மாநிலத்திற்குள்ளேயே வேறு இடங்களில் படிப்பு மையம் அமைக்க வேண்டும் எனில், தனி அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் தொலைநிலை கல்வியை நடத்தும் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு பல்கலைகளும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களிலும், சிங்கப்பூர், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளிலும், பல படிப்பு மையங்களைநடத்துகின்றன.

இந்த படிப்பு மையங்களை மூடினால் தான், இனி தொலைநிலை கல்விக்கான அனுமதி கிடைக்கும் என்ற கட்டாயம், இந்த பல்கலைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் எஸ்.மணியனிடம் கேட்டபோது, ''1979 முதல் அண்ணாமலை பல்கலை சார்பில், பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படிப்பு மையங்கள் நடத்தப்படுகின்றன. அப்போது, இதுபோன்ற நிபந்தனைகள் ஏதும் இல்லை. எங்கள் பல்கலையில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதற்கு நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு பெற்றுள்ளோம். படிப்பு மையங்களை மூடும்படி, யு.ஜி.சி.,யில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை,'' என்றார்