மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் 760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி
எதுவும் பெறாமல் செயல்படுகின்றன.
இந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை கல்வி கட்டணமாக வசூலிக்கின்றன. முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் எதுவும் இல்லை. எனவே, புதிய விதிகளை கொண்டு வந்து தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு மழலையர் பள்ளிக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி, அந்த வரைவு விதிகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள் குறித்து மழலையர் பள்ளிகளின் நிர்வாகங்கள், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று ஏற்கனவே உத்தரவிட்டார்கள்.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க தனியார் பள்ளி நிர்வாகங்கள் கால அவகாசம் கேட்டது. இதையடுத்து, இந்த வழக்கு ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் பள்ளிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து விட்டதாகவும், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.