சிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, மாணவர்களின் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது' என, பள்ளிகளுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது. 'புத்தகச் சுமையில்லாமல், மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய
அரசு அமைத்த, பேராசிரியர் யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
புதிய கல்வி ஆண்டில், பல தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை வாங்கி வரும்படி, மாணவர்களுக்கு கட்டளையிடுவதாக பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடத்திட்ட புத்தகங்களைத் தவிர, மற்ற புத்தகங்களை அதிக விலைக்கு வாங்க, கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அனைத்துப் பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., இயக்குனரகம் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பிஉள்ளது.
அதன் விவரம்:மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, என்.சி.இ.ஆர்.டி.,யும், சி.பி.எஸ்.இ.,யும் முயற்சி மேற்கொண்டுஉள்ளன. இந்நிலையில், பாடத்திட்டத்துக்கு பொருந்தாத, தேர்வு முறை மற்றும் வகுப்புகளுக்கு தேவையில்லாத புத்தகங்களை வாங்க, பள்ளி நிர்வாகம் உத்தரவிடுவது கூடாது. அதிக விலையுடைய, அறிவியல் ரீதியாக பொருந்தாத பல புத்தகங்களை வாங்க, மாணவர்களை பள்ளிகள் நிர்ப்பந்தம் செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே, பாடத்திட்டம் தவிர்த்த புத்தகங்களை, பள்ளிகள் பயன்படுத்தக் கூடாது. இந்த சம்பவம் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது