பொது சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்த வசதி

பொது சேவை மையங்களில், 'ஆன் - லைன்' மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பொது சேவை மையங்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மற்றும் தமிழக மின்னணு நிறுவனமான - 'எல்காட்' மூலம் இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 264 தாலுகா அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியின், 15 மண்டல
அலுவலகங்கள், 50 டிவிஷன் அலுவலகங்கள் மற்றும் சென்னை தலைமை செயலகத்திலும், பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பொது சேவை மையங்கள் மூலம், ஏற்கனவே ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது நடைபெறுகிறது.
அத்துடன், அரசின் சமூக நல திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களும், ஆன் - லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த பொது சேவை மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதியும், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:
பொது சேவை மையங்களில், அத்தியாவசிய கட்டணங்களை, 'ஆன் - லைன்' மூலம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தலாம். மின் நுகர்வோர் எண்ணை குறிப்பிட்டால், மின் கட்டணம் தெரிவிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எந்த பகுதியின் மின் கட்டணத்தையும், பொது சேவை மையம் மூலமாக செலுத்தலாம்.இதன் தொடர்ச்சியாக, பிற கட்டணங்களை செலுத்தும் வசதியும் விரைவில், அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.