700 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நீலகிரி மாவட்டத்தில் குழப்பம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில், 700 ஆசிரியர்களுக்கு, நேற்று, ஒரே நாளில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி
துவங்கியது. முதல் நாளில், தொடக்கப்பள்ளித் துறையில், உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி இடமாறுதல், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.நேற்று, பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது.
இதில், 592 தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்கு உள்ளும், 100 பேர் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் பெற்றனர். இவற்றில், 365 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். மற்றவர்கள், சிறப்பாசிரியர் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டத்தில், இரண்டு தலைமை ஆசிரியர் காலி இடங்கள் மறைத்து வைக்கப்பட்டதாக, திடீர் புகார் எழுந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு மணி நேர கலந்தாய்வு நிறுத்தப்பட்டு, பேச்சு நடத்தி பின் மீண்டும் கலந்தாய்வு நடந்தது.