சுதந்திர தினத்தை முன்னிட்டு, செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள்
பயன்படுத்தும் இணையத் திட்டங்களுக்கு (Data Plans) சிறப்புச் சலுகையை தமிழக
தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம்
வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் சனிக்கிழமையன்று, 69-ஆவது சுதந்திர
தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல்.
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது, செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் இணைய வசதியைப் பெற பயன்படுத்தும்
திட்டங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. -டேட்டா 561-க்கு
ரீசார்ஜ் செய்யும்போது, அவற்றுக்கான காலக்கெடு 60 நாள்களாக
நீட்டிக்கப்படும். அதேபோல், ரூ.821, ரூ.1,011, ரூ.1,949 ஆகிய முகமதிப்பில்
ரீசார்ஜ் செய்யும்போது, 90 நாள்கள் வரை இணையப் பயன்பாட்டைத் தடையின்றி
பெறமுடியும்.
அதேபோல், ரூ.53, 78, 96, 198, 253, 451 ஆகிய முகமதிப்பில் இணைய வசதியைப்
பெற ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக 10 சதவீதம் அளவுக்கு இணையப் பயன்பாட்டை
(Data usage) பெறலாம்.
அதாவது, ஆக. 14 முதல் 17-ஆம் தேதி வரையிலான நான்கு நாள்களுக்கு இணையப்
பயன்பாடு கூடுதலாகக் கிடைக்கப் பெறும். இந்தச் சலுகை சென்னை தொலைபேசி
வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
இந்த அறிய வாய்ப்பை செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறப்புச் சலுகை குறித்த கூடுதல் விவரங்களுக்கு http:tamilnadu.bsnl.co.in
என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.