ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று அளிக்க 28-ம் தேதிவரை வாய்ப்பு

வாழ்நாள் சான்று அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு வரும் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


மாவட்ட கருவூலங்கள், சார்கருவூலங்கள் மற்றும் ஓய்வூதிய அலுவலகம் ஆகியவற்றில் சென்னையில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும், நேர்காணல் செய்ய இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.ஆனால், இதுவரை நேர்காணலுக்கு வராதவர்கள் அல்லது வாழ்நாள் சான்றிதழ் அளிக்காதவர்கள் இம்மாதம் 28-ம் தேதிக்குள் நேர்காணல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
நேர்காணலுக்கு வரமுடியாதவர்கள் உரிய மருத்துவர், அரசிதழ் சான்றிதழ் பெற்ற அலுவலர் மூலம் உரிய வாழ்வுச் சான்று அளிக்கலாம்.மேலும், புதிய மருத்துவ ஓய்வூதியர் நல காப்பீட்டுத் திட்டத்துக்கு உரிய விண்ணப்பத்தை இதுவரை கருவூலத்தில் அளிக்காதவர்கள் நேரில் சென்று உடன் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான அடையாள அட்டையைகருவூலத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.