தமிழக ஆசிரியர் 22 பேருக்குதேசிய விருது அறிவிப்பு

சேலம்: தமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, தேசிய அளவிலும், மாநில அளவிலும், ஆசிரியர் தினமாக
கொண்டாடப்படுகிறது.கல்விப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியரை தேர்வு செய்து, மத்திய, மாநில அரசுகள், விருது மற்றும் ரொக்கப்பரிசை வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி, 2014ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தமிழகத்தில் இருந்து, 22 ஆசிரியர்களை தேர்வு செய்துஉள்ளது.
டில்லியில் விழா
நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, வரும் செப்., 5ம் தேதி, டில்லி, ராஷ்டிரபதிபவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, விருதை வழங்க உள்ளார். கடந்த ஆண்டு வரை, பரிசுத்தொகை, 25 ஆயிரம் ரூபாயாக இருந்தது; இந்த ஆண்டு முதல், 50 ஆயிரமாக வழங்கப்பட உள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு, கடிதங்களை அனுப்பி வருகிறது.