மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது
சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வங்கி
ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடைமுறையானது, அடுத்த மாதம் 1ஆம்
தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க
(ஏஐபிஈஏ) பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம், தில்லியில் வியாழக்கிழமை
செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு
வரும் இந்தப் புதிய நடைமுறை தொடர்பான அறிவிக்கை, விரைவில் வெளியாகும். இது
வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதனால், வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை
பெருமளவில் குறைவதுடன், அவர்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என்று
நம்புகிறேன் என்றார் வெங்கடாசலம். தற்போது, பொதுத் துறை, தனியார் துறை
வங்கிகள் சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகின்றன.