14,500 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்

அரசு பள்ளிகளில் பணிபுரியும், 14 ஆயிரத்து 500 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

15 ஆயிரம் ஆசிரியர்கள்:அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கைவினை, உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களுக்கு, 4,000 நிரந்தர ஆசிரியர்கள்; 15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில், சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதி தேர்வு நடத்தி, அதன்படி பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.

அதற்கான தேர்வு பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்த ஆசிரியர்கள் எப்போது வேண்டுமானாலும், தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, பணி வரன்முறை செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இருந்தும், தேர்வு நடந்தால், தங்களது பணி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில், பல சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர்.

அனைவருக்கும் கல்வி:இந்நிலையில், சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம், பணியிட மாறுதல் வழங்க, பள்ளிக்கல்வியின் கீழ் இயங்கும், மாநில அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.பணி நிரவலுக்கான ஆசிரியர் பட்டியலை, வரும், 28ம் தேதிக்குள் தயார் செய்து அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.