1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி

தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390 ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்
கலந்தாய்வு, பல கட்டங்களாக நடக்கிறது. இதில், 230 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 376 பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 105 பட்டதாரி ஆசிரியர், 108 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதேபோல், 145 பட்டதாரி ஆசிரியர், 426 இடைநிலை ஆசிரியர், தொடக்கப் பள்ளிகளின், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பணி நிரவலில் குளறுபடி: தொடக்கக் கல்வியில் மாணவர் குறைவாக இருக்கும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாற்றும் கலந்தாய்வில், பல குளறுபடிகள் நடந்துள்ளன. இந்த பணி நிரவலில், பல பள்ளிகள் போலி மாணவர் எண்ணிக்கையைக் காட்டி, இடமாறுதலை தவிர்த்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்னையால், கோவை மாவட்டம், சூலுார் வட்டத்தில் நடந்த கலந்தாய்வு, சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆசிரியர் கூறும் மாணவர் எண்ணிக்கை, பள்ளிகளில் உண்மையில் உள்ளதா என, அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதன் பிறகே, ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.