புத்தகத் திருவிழாவில் மாணவர் கலைப் போட்டி:ரூ.1,000 - ரூ.5,000 பரிசு வெல்லலாம்

மதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர் களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடக்கும் போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை புத்தகங்களை பரிசாக வெல்லலாம். புத்தகத்திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை (ஆக., 28) துவங்கி செப்., 7 வரை நடக்கிறது. 

         புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பேச்சு, ஓவியப் போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் புத்தகங்களாக வழங்கப்படும்.

போட்டிகள் ஆக., 30ல் காலை 10 மணிக்கு தமுக்கம் மைதானத்தில் நடக்கும்.பேச்சுப் போட்டி: 6ம் வகுப்பு - 8ம் வகுப்பு, தலைப்பு 'திருக்குறள் ஒப்புவித்தல்' அதிகாரம் 10 முதல் 20 வரை. 9 - 10ம் வகுப்பு 'கனவு காணுங்கள்', 11 - 12ம் வகுப்பு 'அக்னிச் சிறகுகள்'. ஒரு பள்ளிக்கு ஒவ்வொரு பிரிவிலும் இருவர் பங்கேற்கலாம். முதல்பரிசு ரூ.1,000, 2ம் பரிசு ரூ.2,000, 3ம் பரிசு ரூ.3,000.கல்லுாரி மாணவர்களுக்கான தலைப்பு 'வாழச் செய்கின்ற மருந்து'. ஒரு கல்லுாரிக்கு மூவர் மட்டும் பங்கு பெறலாம். 

முதல்பரிசு ரூ.2,000, 2ம் பரிசு ரூ.3,000, 3ம் பரிசு ரூ.5,000.ஓவியப் போட்டி: 6ம் வகுப்பு - 8 ம் வகுப்பு தலைப்பு 'உன்னைக் கவர்ந்த இயற்கை காட்சி'. 9 - 10 ம் வகுப்பு, 11 - 12 ம் வகுப்புக்கு தனித்தனியாக போட்டி நடக்கும். தலைப்புகள் போட்டி துவங்கும் முன் கொடுக்கப்படும். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பள்ளியில் இருந்து இருவர் பங்கேற்கலாம். முதல்பரிசு ரூ.1000, 2ம் பரிசு ரூ. 2,000, 3ம் பரிசு ரூ.5,000.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை கூப்பன்களாக வழங்கப்படும். 

விரும்பும் புத்தகங்களை வாங்கி நிறைவு விழாவில் பரிசாக வழங்கப்படும்.போட்டியில் பங்கேற்பவர்கள் பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்தை அனுப்ப வேண்டிய முகவரி, போட்டி ஒருங்கிணைப்பாளர், சர்வோதய இலக்கியப் பண்ணை, 32/1 மேலவெளிவீதி, மதுரை. தொடர்புக்கு 94435 72224.