புதிய வடிவில் 100 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி தலைவர்

புதிய வடிவமைப்பிலான நூறு ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது.  இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்தி: 
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம், பின்புறத்தில் ரூபாய்க் குறியீட்டுடன் உட்பொதிந்த எழுத்து ஏதுமின்றி, பின்புறத்தில் ஆண்டு "2015' என்று அச்சிடப்பட்ட 100 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது.
தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு எல்லா வகையிலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள "மகாத்மா காந்தி வரிசை- 2005' ரூ. 100 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும். 
நோட்டிலுள்ள இரண்டு வரிசை எண்களும் வரிசையில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை ஏறுமுகமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் முன்னிணைப்பாக உள்ள முதல் மூன்று எண்-எழுத்துகள் நிலையான ஒரே வடிவத்தில் இருக்கும். இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ரூ. 100 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் சட்டப்படி தொடர்ந்து செல்லத் தக்கவையே என்று அதில் கூறப்பட்டுள்ளது.