10ம் வகுப்பு 'பாஸ்' மாணவர்களுக்குவேலை வாய்ப்பு பதிவில் சலுகை

'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது; மே, 21ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது; பின், மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் 'பெயில்' ஆனவர்களுக்கான மறு தேர்வுகள் நடந்தன.


        திருத்தப்பட்ட மதிப்பெண்களுடன், அசல் மதிப்பெண் சான்றிதழ், கடந்த, 5ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளில், வேலைவாய்ப்பு பதிவுப் பணி நடந்து வருகிறது. மாணவர்கள், வரும், 19ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்; வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:மாணவர்கள், 19ம் தேதி வரை எந்த தேதியில் பதிவு செய்தாலும், ஆக., 5ம் தேதிக்கான பதிவு மூப்பு கிடைக்கும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.-