CRC பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு:4,000 ஆசிரியர்களுக்கு அதிரடி "நோட்டீஸ்'

தொடக்கக்கல்வித்துறையில், குறுவள மைய பயிற்சி வகுப்பை புறக்கணித்த, 4,000 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், 385 யூனியன்களில் உள்ள வட்டார வளமையங்களில், தலா ஒரு யூனியனுக்கு, குறைந்தது, ஏழு வீதம், மொத்தமாக, 4,500க்கும் மேற்பட்ட குறுவள மையங்கள் உள்ளன. ஒவ்வொரு குறுவள மையமும், 10 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உள்ளடக்கி உள்ளது.
இந்த மையங்களில், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு தலைப்புகளில், பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, இடைநிலை தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை, பட்டதாரி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடத்தப்படும்.
இந்த குறுவள மையங்களில் வழங்கப்படும் பயிற்சியின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவருக்கு அமல்படுத்த வேண்டும். 
இந்நிலையில், நடப்பு, கல்வி ஆண்டிற்கான, குறுவள மையப்பயிற்சி, கடந்த, 11ம் தேதி, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை வலுவூட்டல் என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் குறுவள மையத்தில் நடந்தது.
ஆனால், பயிற்சி வகுப்பில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்காமல் புறக்கணித்ததால், தொடக்கக்கல்வித்துறை சார்பில், அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக, பங்கேற்காத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான காரணம் கூறவில்லை என்றால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.