கல்லூரி ஆசிரியர் பணி நேரத்தை நிர்ணயிக்க... அனுமதி:டூஉயர் கல்வி துறை செயலருக்கு யு.ஜி.சி., கடிதம்

பெங்களூரு:“அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதுநிலை கல்லுாரிகளில், ஆசிரியர்களின் பணி நேரம் குறித்து, மாநில உயர்கல்வி துறையே முடிவு செய்து கொள்ளலாம்,” என்று யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.


கர்நாடகாவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில், 7,000 பேர், நிரந்தர ஆசிரியர்கள்; 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

16 மணி நேரம்:பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) வழி காட்டுதலின்படி, துணை பேராசிரியர், வாரத்தில் 16 மணி நேரம்; இணை பேராசிரியர்கள், 14 மணி நேரம்; பேராசிரியர்கள், 12 மணி நேரம் பாடம் கற்பிக்க வேண்டும். இருப்பினும், கர்நாடகாவில், இந்த மூன்று பிரிவினரும், வாரந்தோறும், 16 மணி நேரம் பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த பணி நேரத்தை, 22 மணி நேரமாக அதிகரித்து, மாநில உயர் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, 2014 நவம்பரிலேயே வெளியிடப்பட்டது.முதல் நிலை கல்லுாரிகளில், ஆசிரியர்கள், 22 மணி நேரம் பாடம் கற்பிப்பது அவசியம் என்றும் கூறியது.இதற்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சங்க தலைவர் டாக்டர் பிரகாஷ் கூறுகையில், “ஆசிரியர்களின் பணி நேரம் அதிகரிக்கும் போது, பாடம் கற்பிக்கும் தரம் நேரடியாக பாதிக்கப்படும். இதற்கு பதிலாக, ஆசிரியர்களின் திறமையை மதிப்பிடும் முறையை அறிமுகப்படுத்தலாம்,” என்றார்.'யு.ஜி.சி., விதிமுறைப்படி, ஆசிரியர்கள், 16 மணி நேரம் பாடம் கற்பிப்பது போக, ஆறு மணி நேரம் ஆராய்ச்சிகளில் செலவிடலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

'ஆனால், சில ஆசிரியர்கள் மட்டுமே, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உள்ளதால், மற்ற ஆசிரியர்கள், 16 மணி நேரம் பாடம் நடத்தினால் போதும் என உத்தரவிட வேண்டும்' என்று, யு.ஜி.சி.,க்கு, ஆசிரியர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதினர்.

குறைவாக...:இதையடுத்து, மாநில உயர்கல்வி துறை முதன்மை செயலர் பரத்லால் மீனாவுக்கு, யு.ஜி.சி., அனுப்பிய கடிதத்தில், 'ஆசிரியர்களின் வேலை நேரம் அதிகரிப்பதோ, குறைப்பதோ மாநில உயர் கல்வி துறையே முடிவு செய்து கொள்ளலாம். 'ஆனால், யு.ஜி.சி., குறிப்பிட்டுள்ள வேலை நேரத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ளது.